திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.2 திருப்பூந்தராய் (சீர்காழி) பண் - காந்தாரபஞ்சமம் |
பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்
வாயினாள்பனி மாமதி போல்முகத்
தந்தமில்புக ழாள்மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்துசேர்விடம் வானவ ரெத்திசை
யுந்நிறைந்து வலஞ்செய்து மாமலர்
புந்திசெய்திறைஞ் சிப்பொழிபூந்தராய் போற்றுதுமே.
|
1 |
காவியங்கருங் கண்ணி னாள்கனித்
தொண்டைவாய்க்கதிர் முத்தநல் வெண்ணகைத்
தூவியம்பெடை யன்னநடைச்சுரி மென்குழலாள்
தேவியுந்திரு மேனியோர் பாகமாய்
ஒன்றிரண்டொரு மூன்றொடு சேர்பதி
பூவிலந்தணன் ஒப்பவர்பூந்தராய் போற்றுதுமே.
|
2 |
பையராவரும் அல்குல் மெல்லியல்
பஞ்சின்நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
தையலாளொரு பாலுடையெம்மிறை சாருமிடஞ்
செய்யெலாங்கழு நீர்கமலம் மலர்த்
தேறலூறலின் சேறுல ராதநற்
பொய்யிலாமறை யோர்பயில்பூந்தராய் போற்றுதுமே.
|
3 |
முள்ளிநாண்முகை மொட்டியல் கோங்கின்
அரும்புதேன்கொள் குரம்பைமூ வாமருந்
துள்ளியன்றபைம் பொற்கலசத்திய லொத்தமுலை
வெள்ளிமால்வரை யன்னதோர் மேனியின்
மேவினார்பதி வீமரு தண்பொழிற்
புள்ளினந்துயில் மல்கியபூந்தராய் போற்றுதுமே.
|
4 |
பண்ணியன்றெழு மென்மொழி யாள்பகர்
தோனையேர்திகழ் பைந்தளிர் மேனியோர்
பெண்ணியன்றமொய்ம் பிற்பெருமாற்கிடம் பெய்வளையார்
கண்ணியன்றெழு காவிச் செழுங்கரு
நீலமல்கிய காமரு வாவிநற்
புண்ணியருறை யும்பதிபூந்தராய் போற்றுதுமே.
|
5 |
வாணிலாமதி போலநுத லாள்மட
மாழையொண்கணாள் வண்தர ளந்நகை
பாணிலாவிய இன்னிசையார்மொழிப் பாவையொடுஞ்
சேணிலாத்திகழ் செஞ்சடையெம்மண்ணல்
சேர்வதுசிக ரப்பெருங் கோயில்சூழ்
போணிலாநுழை யும்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.
|
6 |
காருலாவிய வார்குழ லாள்கயற்
கண்ணினாள் புயற்காலொளி மின்னிடை
வாருலாவிய மென்முலையாள்மலை மாதுடனாய்
நீருலாவிய சென்னி யன்மன்னி
நிகருநாமம்முந் நான்கு நிகழ்பதி
போருலாவெயில் சூழ்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.
|
7 |
காசைசேர்குழ லாள்கய லேர்தடங்
கண்ணிகாம்பன தோட்கதிர் மென்முலைத்
தேசுசேர்மலை மாதமருந்திரு மார்பகலத்
தீசன்மேவும் இருங்கயி லையெடுத்
தானைஅன்றடர்த் தான்இணைச் சேவடி
பூசைசெய்பவர் சேர்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.
|
8 |
கொங்குசேர்குழ லாள்நிழல் வெண்ணகைக்
கொவ்வைவாய்க் கொடியேரிடை யாளுமை
பங்குசேர்திரு மார்புடையார்படர் தீயுருவாய்
மங்குல்வண்ணனும் மாமல ரோனும்
மயங்கநீண்டவர் வான்மிசை வந்தெழு
பொங்குநீரின் மிதந்தநற்பூந்தராய் போற்றுதுமே.
|
9 |
கலவமாமயி லார்இய லாள்கரும்
பன்னமென்மொழி யாள்கதிர் வாணுதற்
குலவுபூங்குழ லாளுமைகூறனை வேறுரையால்
அலவைசொல்லுவார் தேரமண் ஆதர்கள்
ஆக்கினான்றனை நண்ணலு நல்குநற்
புலவர்தாம்புகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமே.
|
10 |
தேம்பல்நுண்ணிடை யாள்செழுஞ் சேலன
கண்ணியோடண்ணல் சேர்விடந் தேன்அமர்
பூம்பொழில்திகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமென்
றோம்புதன்மையன் முத்தமிழ் நான்மறை
ஞானசம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண்
டாம்படியிவை யேத்தவல்லார்க்கடை யாவினையே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.3 திருப்புகலி (சீர்காழி) - நாலடிமேல் வைப்பு பண் - காந்தாரபஞ்சமம் |
இயலிசை யெனும்பொரு ளின்திறமாம்
புயலன மிடறுடைப் புண்ணியனே
கயலன அரிநெடுங் கண்ணியொடும்
அயலுல கடிதொழ அமர்ந்தவனே
கலனாவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்
நிலனாள்தொறும் இன்புற நிறைமதி யருளினனே.
|
1 |
நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம்
இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம்
மலையினில் அரிவையை வெருவவன்தோல்
அலைவரு மதகரி யுரித்தவனே
இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி
உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே.
|
2 |
பாடினை அருமறை வரன்முறையால்
ஆடினை காணமுன் அருவனத்திற்
சாடினை காலனைத் தயங்கொளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே
நினையேயடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
தனையேயிட மேவினை தவநெறி அருளெமக்கே.
|
3 |
நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி யலம்பநல்ல
முழவொடும் அருநட முயற்றினனே
முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
அடியாரவ ரேத்துற அழகொடும் இருந்தவனே.
|
4 |
கருமையின் ஒளிர்கடல் நஞ்சமுண்ட
உரிமையின் உலகுயிர் அளித்தநின்றன்
பெருமையை நிலத்தவர் பேசினல்லால்
அருமையில் அளப்பரி தாளவனே
அரவோரிடை யாளொடும் அலைகடல் மலிபுகலிப்
பொருள்சேர்தர நாடொறும் புவிமிசைப் பொலிந்தவனே.
|
5 |
அடையரி மாவொடு வேங்கையின்தோல்
புடைபட அரைமிசைப் புனைந்தவனே
படையுடை நெடுமதிற் பரிசழித்த
விடையுடைக் கொடிமல்கு வேதியனே
விகிர்தாபர மாநின்னை விண்ணவர் தொழப்புகலித்
தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே.
|
6 |
அடியவர் தொழுதெழ அமரரேத்தச்
செடியவல் வினைபல தீர்ப்பவனே
துடியிடை அகலல்குல் தூமொழியைப்
பொடியணி மார்புறப் புல்கினனே
புண்ணியா புனிதாபுக ரேற்றினை புகலிந்நகர்
நண்ணினாய் கழலேத்திட நண்ணகிலா வினையே.
|
7 |
இரவொடு பகலதாம் எம்மானுன்னைப்
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
அரவிரி சடைமுடி ஆண்டகையே
அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை
இனமார்தரு தோளடர்த் திருந்தனை புகலியுளே.
|
8 |
உருகிட வுவகைதந் துடலினுள்ளால்
படுகிடும் அமுதன பண்பினனே
பொருகடல் வண்ணனனும் பூவுளானும்
பெருகிடும் அருளெனப் பிறங்கெரியாய்
உயர்ந்தாயினி நீயெனை ஒண்மலரடி யிணைக்கீழ்
வயந்தாங்குற நல்கிடு வளர்மதிற் புகலிமனே.
|
9 |
கையினி லுண்பவர் கணிகைநோன்பர்
செய்வன தவமலாச் செதுமதியார்
பொய்யவ ருரைகளைப் பொருளெனாத
மெய்யவ ரடிதொழ விரும்பினனே
வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி
உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே.
|
10 |
புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
விண்ணவ ரடிதொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்
நடலையவை யின்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.5 திருப்பூந்தராய் (சீர்காழி) - ஈரடிமேல் வைப்பு பண் - காந்தாரபஞ்சமம் |
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்ற தாகிய நம்பன்தானே.
|
1 |
புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளந் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத் தில்லுயர் வாருள்கு நன்னெறி
மூல மாய முதல்வன்தானே.
|
2 |
வேந்த ராயுல காள விருப்புறிற்
பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல்
நீதி யால்நினைந் தேத்தி யுள்கிடச்
சாதி யாவினை யானதானே.
|
3 |
பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்
ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச்
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்து வார்சடை யெம்மிறையே.
|
4 |
பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்திய ராகி வணங்கிட
நுந்தம் மேல்வினை யோட வீடுசெய்
எந்தை யாயஎம் ஈசன்தானே.
|
5 |
பூதஞ் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கு நாடொறும் இன்ப நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே.
|
6 |
புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிடப்
பாவ மாயின தீரப் பணித்திடுஞ்
சேவ தேறிய செல்வன்தானே.
|
7 |
போத கத்துரி போர்த்தவன் பூந்தராய்
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
பெருக்கி நின்ற எம்பிஞ்ஞகனே.
|
8 |
மத்த மான இருவர் மருவொணா
அத்த னானவன் மேவிய பூந்தராய்
ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை
மாளு மாறருள் செய்யுந்தானே.
|
9 |
பொருத்த மில்சமண் சாக்கியர் பொய்கடிந்
திருத்தல் செய்த பிரான்இமை யோர்தொழப்
பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
ஏந்து மான்மறி யெம்மிறையே.
|
10 |
புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய்
அந்த மில்லெம் மடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண் டேத்தி வாழும்நும்
பந்த மார்வினை பாறிடுமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.7 திருப்புகலி (சீர்காழி) பண் - காந்தாரபஞ்சமம் |
கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ லார்க்கவே
பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ் சோதியும்
புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக லிந்நகர்ப்
பெண்ணின்நல் லாளொடும் வீற்றிருந் தபெரு மானன்றே.
|
1 |
சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை யின்மிசைப்
பாம்பினோ டும்மதி சூடினா னும்பசு வேறியும்
பூம்படு கல்லிள வாளைபா யும்புக லிந்நகர்க்
காம்பன தோளியோ டும்மிருந் தகட வுளன்றே.
|
2 |
கருப்புநல் வார்சிலைக் காமன்வே வக்கடைக் கண்டானும்
மருப்புநல் லானையின் ஈருரி போர்த்த மணாளனும்
பொருப்பன மாமணி மாடமோங் கும்புக லிந்நகர்
விருப்பின்நல் லாளொடும் வீற்றிருந் தவிம லனன்றே.
|
3 |
அங்கையில் அங்கழல் ஏந்தினா னும்மழ காகவே
கங்கையைச் செஞ்சடை சூடினா னுங்கட லன்னிடைப்
பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக லிந்நகர்
மங்கைநல் லாளொடும் வீற்றிருந் தமண வாளனே.
|
4 |
சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித கர்த்தானும்
நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழும் நாதனும்
பூமல்கு தண்பொழில் மன்னுமந் தண்புக லிந்நகர்க்
கோமள மாதொடும் வீற்றிருந் தகுழ கனன்றே.
|
5 |
இரவிடை யொள்ளெளி யாடினா னும்மிமை யோர்தொழச்
செருவிடை முப்புரந் தீயெரித் தசிவ லோகனும்
பொருவிடை யொன்றுகந் தேறினா னும்புக லிந்நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந் தஅழ கனன்றே.
|
6 |
சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் பாலன்மேல்
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள் விப்புகை
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர்ப்
பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர மனன்றே.
|
7 |
கன்னெடு மால்வரைக் கீழரக் கன்னிடர் கண்டானும்
வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச யற்கொரு
பொன்னெடுங் கோல்கொடுத் தானுமந் தண்புக லிந்நகர்
அன்னமன் னநடை மங்கையொ டுமமர்ந் தானன்றே.
|
8 |
பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித்
தன்னையின் னானெனக் காண்பரி யதழற் சோதியும்
புன்னைபொன் தாதுதிர் மல்குமந் தண்புக லிந்நகர்
மின்னிடை மாதொடும் வீற்றிருந் தவிம லனன்றே.
|
9 |
பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர்
தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர்ச் சோதியான்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்
வண்டமர் கோதையொ டும்மிருந் தமண வாளனே.
|
10 |
பூங்கமழ் கோதையொ டும்மிருந் தான்புக லிந்நகர்ப்
பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை
ஆங்கமர் வெய்திய ஆதியா கஇசை வல்லவர்
ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வதும் உண்மையே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.13 திருப்பூந்தராய் (சீர்காழி) பண் - காந்தாரபஞ்சமம் |
மின்னன எயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரம்உகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை அரிவை பங்கரே.
|
1 |
மூதணி முப்புரத் தெண்ணி லோர்களை
வேதணி சரத்தினால் வீட்டி னாரவர்
போதணி பொழிமலர் பூந்த ராய்நகர்த்
தாதணி குழலுமை தலைவர் காண்மினே.
|
2 |
தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப்
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர்க்
கருக்கிய குழலுமை கணவர் காண்மினே.
|
3 |
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
மாகமார் புரங்களை மறித்த மாண்பினர்
பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர்ப்
பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே.
|
4 |
வெள்ளெயி றுடையவ்வ விரவ லார்களூர்
ஒள்ளெளி யூட்டிய வொருவ னாரொளிர்
புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர்க்
கள்ளணி குழலுமை கணவர் காண்மினே.
|
5 |
துங்கியல் தானவர் தோற்ற மாநகர்
அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர்
பொங்கிய கடலணி பூந்த ராய்நகர்
அங்கய லனகணி அரிவை பங்கரே.
|
6 |
அண்டர்க ளுய்ந்திட அவுணர் மாய்தரக்
கண்டவர் கடல்விட முண்ட கண்டனார்
புண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர்
வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே.
|
7 |
மாசின அரக்கனை வரையின் வாட்டிய
காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க்
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே.
|
8 |
தாமுக மாக்கிய அசுரர் தம்பதி
வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணனும்
பூமகன் அறிகிலாப் பூந்தராய் நகர்க்
கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே.
|
9 |
முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம்
அத்தகும் அழலிடை வீட்டி னார்அமண்
புத்தரும் அறிவொணாப் பூந்த ராய்நகர்க்
கொத்தணி குழலுமை கூறர் காண்மினே.
|
10 |
புரமெரி செய்தவர் பூந்த ராய்நகர்ப்
பரமலி குழலுமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன்மெய்ப் பாடல் வல்லவர்
சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.24 திருக்கழுமலம் (சீர்காழி) பண் - கொல்லி |
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
|
1 |
போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.
|
2 |
தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.
|
3 |
அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.
|
4 |
அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.
|
5 |
மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.
|
6 |
குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.
|
7 |
அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.
|
8 |
நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர்
அடியொடு முடியறி யாவழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.
|
9 |
தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.
|
10 |
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.37 திருப்பிரமபுரம் (சீர்காழி) பண் - கொல்லி |
கரமுனம்மல ராற்புனல்மலர்
தூவியேகலந் தேத்துமின்
பரமனூர்பல பேரினாற்பொலி
பத்தர்சித்தர்கள் தாம்பயில்
வரமுன்னவ்வருள் செய்யவல்லஎம்
ஐயன்நாடொறும் மேயசீர்ப்
பிரமனூர்பிர மாபுரத்துறை
பிஞ்ஞகனருள் பேணியே.
|
1 |
விண்ணிலார்மதி சூடினான்விரும்
பும்மறையவன் தன்றலை
உண்ணநன்பலி பேணினான்உல
கத்துளூனுயி ரான்மலைப்
பெண்ணினார்திரு மேனியான்பிர
மாபுரத்துறை கோயிலுள்
அண்ணலாரரு ளாளனாயமர்
கின்றஎம்முடை யாதியே.
|
2 |
எல்லையில்புக ழாளனும்இமை
யோர்கணத்துடன் கூடியும்
பல்லையார்தலை யிற்பலியது
கொண்டுகந்த படிறனுந்
தொல்லைவையகத் தேறுதொண்டர்கள்
தூமலர்சொரிந் தேத்தவே
மல்லையம்பொழில் தேன்பில்கும்பிர
மாபுரத்துறை மைந்தனே.
|
3 |
அடையலார்புரஞ் சீறியந்தணர்
ஏத்தமாமட மாதொடும்
பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர
மாபுரத்துறை கோயிலான்
தொடையலார்நறுங் கொன்றையான்தொழி
லேபரவிநின் றேத்தினால்
இடையிலார்சிவ லோகமெய்துதற்
கீதுகாரணங் காண்மினே.
|
4 |
வாயிடைம்மறை யோதிமங்கையர்
வந்திடப்பலி கொண்டுபோய்ப்
போயிடம்எரி கானிடைப்புரி
நாடகம்இனி தாடினான்
பேயொடுங்குடி வாழ்வினான்பிர
மாபுரத்துறை பிஞ்ஞகன்
தாயிடைப்பொருள் தந்தையாகுமென்
றோதுவார்க்கருள் தன்மையே.
|
5 |
ஊடினாலினி யாவதென்னுயர்
நெஞ்சமேயுறு வல்வினைக்
கோடிநீயுழல் கின்றதென்னழ
லன்றுதன்கையி லேந்தினான்
பீடுநேர்ந்தது கொள்கையான்பிர
மாபுரத்துறை வேதியன்
ஏடுநேர்மதி யோடராவணி
எந்தையென்றுநின் றேத்திடே.
|
6 |
செய்யன்வெள்ளியன் ஒள்ளியார்சில
ரென்றும்ஏத்தி நினைந்திட
ஐயன்ஆண்டகை அந்தணன்அரு
மாமறைப்பொரு ளாயினான்
பெய்யும்மாமழை யானவன்பிர
மாபுரம்இடம் பேணிய
வெய்யவெண்மழு வேந்தியைந்நினைந்
தேத்துமின்வினை வீடவே.
|
7 |
கன்றொருக்கையில் ஏந்திநல்விள
வின்கனிபட நூறியுஞ்
சென்றொருக்கிய மாமறைப்பொருள்
தேர்ந்தசெம்மல ரோனுமாய்
அன்றரக்கனைச் செற்றவன்அடி
யும்முடியவை காண்கிலார்
பின்றருக்கிய தண்பொழிற்பிர
மாபுரத்தரன் பெற்றியே.
|
8 |
உண்டுடுக்கைவிட் டார்களும்உயர்
கஞ்சிமண்டைகொள் தேரரும்
பண்டடக்குசொற் பேசுமப்பரி
வொன்றிலார்கள்சொல் கொள்ளன்மின்
தண்டொடக்குவன் சூலமுந்தழல்
மாமழுப்படை தன்கையிற்
கொண்டொடுக்கிய மைந்தன்எம்பிர
மாபுரத்துறை கூத்தனே.
|
9 |
பித்தனைப்பிர மாபுரத்துறை
பிஞ்ஞகன்கழல் பேணியே
மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை
செய்துநன்பொருள் மேவிட
வைத்தசிந்தையுள் ஞானசம்பந்தன்
வாய்நவின்றெழு மாலைகள்
பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை
போற்றிசெய்யும்மெய்ம் மாந்தரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.43 சீர்காழி பண் - கௌசிகம் |
சந்த மார்முலை யாள்தன கூறனார்
வெந்த வெண்பொடி யாடிய மெய்யனார்
கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
எந்தை யாரடி யென்மனத் துள்ளவே.
|
1 |
மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத்
தேனி டங்கொளுங் கொன்றையந் தாரினார்
கானி டங்கொளுந் தண்வயற் காழியார்
ஊனி டங்கொண்டென் உச்சியில் நிற்பரே.
|
2 |
மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர்
பைகொள் வாளர வாட்டும் படிறனார்
கைகொள் மான்மறி யார்கடற் காழியுள்
ஐயன் அந்தணர் போற்ற இருக்குமே.
|
3 |
புற்றின் நாகமும் பூளையும் வன்னியுங்
கற்றை வார்சடை வைத்தவர் காழியுட்
பொற்றொ டியோ டிருந்தவர் பொற்கழல்
உற்ற போதுடன் ஏத்தி யுணருமே.
|
4 |
நலியுங் குற்றமும் நம்முட னோய்வினை
மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய
கலிக டிந்தகை யார்கடற் காழியுள்
அலைகொள் செஞ்சடை யாரடி போற்றுமே.
|
5 |
பெண்ணொர் கூறினர் பேயுடன் ஆடுவர்
பண்ணும் ஏத்திசை பாடிய வேடத்தர்
கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள்
அண்ண லாய அடிகள் சரிதையே.
|
6 |
பற்று மானும் மழுவும் அழகுற
முற்று மூர்திரிந் துபலி முன்னுவர்
கற்ற மாநன் மறையவர் காழியுட்
பெற்றம் ஏற துகந்தார் பெருமையே.
|
7 |
எடுத்த வல்லரக் கன்முடி தோளிற
அடர்த்து கந்தருள் செய்தவர் காழியுள்
கொடித்த யங்குநற் கோயிலுள் இன்புற
இடத்து மாதொடு தாமும் இருப்பரே.
|
8 |
காலன் தன்னுயிர் வீட்டு கழலடி
மாலு நான்முகன் தானும் வனப்புற
ஓல மிட்டுமுன் தேடி யுணர்கிலாச்
சீலங் கொண்டவ னூர்திகழ் காழியே.
|
9 |
உருவ நீத்தவர் தாமும் உறுதுவர்
தருவ லாடையி னாருந் தகவிலர்
கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள்
ஒருவன் சேவடி யேயடைந் துய்ம்மினே.
|
10 |
கானல் வந்துல வுங்கடற் காழியுள்
ஈன மில்லி இணையடி யேத்திடும்
ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ்
மான மாக்கும் மகிழ்ந்துரை செய்யவே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.56 திருப்பிரமபுரம் (சீர்காழி) பண் - பஞ்சமம் |
இறையவன் ஈசன்எந்தை இமையோர்தொழு தேத்தநின்ற
கறையணி கண்டன்வெண்தோ டணிகாதினன் காலத்தன்று
மறைமொழி வாய்மையினான் மலையாளொடும் மன்னுசென்னிப்
பிறையணி செஞ்சடையான் பிரமாபுரம் பேணுமினே.
|
1 |
சடையினன் சாமவேதன் சரிகோவண வன்மழுவாட்
படையினன் பாய்புலித்தோ லுடையான்மறை மல்கலைநூல்
உடையவன் ஊனமில்லி யுடனாயுமை நங்கையென்னும்
பெடையொடும் பேணுமிடம் பிரமாபுரம் பேணுமினே.
|
2 |
மாணியை நாடுகாலன் உயிர்மாய்தரச் செற்றுக்காளி
காணிய ஆடல்கொண்டான் கலந்தூர்வழிச் சென்றுபிச்சை
ஊணியல் பாகக்கொண்டங் குடனேயுமை நங்கையொடும்
பேணிய கோயில்மன்னும் பிரமாபுரம் பேணுமினே.
|
3 |
பாரிடம் விண்ணுமெங்கும் பயில்நஞ்சு பரந்துமிண்டப்
பேரிடர்த் தேவர்கணம் பெருமானிது காவெனலும்
ஓரிடத்தே கரந்தங் குமைநங்கையொ டும்முடனே
பேரிட மாகக்கொண்ட பிரமாபுரம் பேணுமினே.
|
4 |
நச்சர வச்சடைமேல் நளிர்திங்களு மொன்றவைத்தங்
கச்சமெ ழவிடைமேல் அழகார்மழு வேந்திநல்ல
இச்சை பகர்ந்துமிக இடுமின்பலி யென்றுநாளும்
பிச்சைகொள் அண்ணல்நண்ணும் பிரமாபுரம் பேணுமினே.
|
5 |
பெற்றவன் முப்புரங்கள் பிழையாவண்ணம் வாளியினாற்
செற்றவன் செஞ்சடையில் திகழ்கங்கைத னைத்தரித்திட்
டொற்றை விடையினனாய் உமைநங்கையொ டும்முடனே
பெற்றிமை யாலிருந்தான் பிரமாபுரம் பேணுமினே.
|
6 |
வேத மலிந்தஒலி விழவின்னொலி வீணையொலி
கீத மலிந்துடனே கிளரத்திகழ் பௌவமறை
ஓத மலிந்துயர்வான் முகடேறவொண் மால்வரையான்
பேதை யொடும்மிருந்தான் பிரமாபுரம் பேணுமினே.
|
7 |
இமையவர் அஞ்சியோட எதிர்வாரவர் தம்மையின்றி
அமைதரு வல்லரக்கன் அடர்த்தும்மலை அன்றெடுப்பக்
குமையது செய்துபாடக் கொற்றவாளொடு நாள்கொடுத்திட்
டுமையொ டிருந்தபிரான் பிரமாபுரம் உன்னுமினே.
|
8 |
ஞாலம் அளித்தவனும் அரியும்மடி யோடுமுடி
காலம் பலசெலவுங் கண்டிலாமையி னாற்கதறி
ஓல மிடஅருளி உமைநங்கையொ டும்முடனாய்
ஏல இருந்தபிரான் பிரமாபுரம் ஏத்துமினே.
|
9 |
துவருறும் ஆடையினார் தொக்கபீலியர் நக்கரையர்
அவரவர் தன்மைகள்கண் டணுகேன்மின் னருள்பெறுவீர்
கவருறு சிந்தையொன்றிக் கழிகாலமெல் லாம்படைத்த
இவரவர் என்றிறைஞ்சிப் பிரமாபுரம் ஏத்துமினே.
|
10 |
உரைதரு நான்மறையோர் புகழ்ந்தேத்தவொண் மாதினொடும்
வரையென வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்
தரசினை யேத்தவல்ல அணிசம்பந்தன் பத்தும்வல்லார்
விரைதரு விண்ணுலகம் எதிர்கொள்ள விரும்புவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.67 திருப்பிரமபுரம் (சீர்காழி) - வழிமொழித்திருவிராகம் பண் - சாதாரி |
சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம்
முரணழிய அரணமதில்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள்
கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள்
வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை
பரவவளர் பிரமபுரமே.
|
1 |
தாணுமிகு வாணிசைகொள் தாணுவியர்
பேணுமது காணுமளவிற்
கோணுநுதல் நீளநயனி கோணில்பிடி
மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய வாணியல்கொள்
மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை யேணிநகர் காணிறிவி
காணநடு வேணுபுரமே.
|
2 |
பகலொளிசெய் நகமணியை முகைமலரை
நிகழ்சரண வகவுமுனிவர்க்
ககலமலி சகலகலை மிகவுரைசெய்
முகமுடைய பகவனிடமாம்
பகைகளையும் வகையில்அறு முகஇறையை
மிகஅருள நிகரிலிமையோர்
புகவுலகு புகழஎழில் திகழநிக
ழலர்பெருகு புகலிநகரே.
|
3 |
அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர
வங்களெழில் தங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிகர்
எங்களிறை தங்குமிடமாம்
வெங்கதிர்வி ளங்குலகம் எங்குமெதிர்
பொங்கெரி புலன்கள்களைவோர்
வெங்குரவி ளங்கியுமை பங்கர்சர
ணங்கள்பணி வெங்குருவதே.
|
4 |
ஆணியல்பு காணவன வாணவியல்
பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை
பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணவருள் மாணுபிர
மாணியிட மேணிமுறையிற்
பாணியுல காளமிக வாணின்மலி
தோணிநிகர் தோணிபுரமே.
|
5 |
நிராமய பராபர புராதன
பராவுசிவ ராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை
புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழில் தராயர
பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு
தராய்மொழி விராயபதியே.
|
6 |
அரணையுறு முரணர்பலர் மரணம்வர
விரணமதி லரமலிபடைக்
கரம்விசிறு விரகனமர் கரணனுயர்
பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவிடல் புரளமுறு
மரவையரி சிரமரியவச்
சிரமரன சரணமவை பரவவிரு
கிரகமமர் சிரபுரமதே.
|
7 |
அறமழிவு பெறவுலகு தெறுபுயவன்
விறலழிய நிறுவிவிரன்மா
மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற
னுறஅருளும் இறைவனிடமாங்
குறைவின்மிக நிறைதையுழி மறையமரர்
நிறையருள முறையொடுவரும்
புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல்
பெறவருளு புறவமதுவே.
|
8 |
விண்பயில மண்பகிரி வண்பிரமன்
எண்பெரிய பண்படைகொண்மால்
கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள்
தண்புகழ்கொள் கண்டனிடமாம்
மண்பரியு மொண்பொழிய நுண்புசகர்
புண்பயில விண்படரவச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய்
பண்புகளை சண்பைநகரே.
|
9 |
பாழியுறை வேழநிகர் பாழமணர்
சூழுமுட லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி யேழையவள்
வாழுமிறை தாழுமிடமாங்
கீழிசைகொள் மேலுலகில் வாழரசு
சூழரசு வாழவரனுக்
காழியசில் காழிசெய வேழுலகில்
ஊழிவளர் காழிநகரே.
|
10 |
நச்சரவு கச்செனவ சைச்சுமதி
யுச்சியின்மி லைச்சொருகையான்
மெய்ச்சிர மனைச்சுலகி னிச்சமிடு
பிச்சையமர் பிச்சனிடமாம்
மச்சமத நச்சிமத மச்சிறுமி
யைச்செய்தவ வச்சவிரதக்
கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள்
நச்சிமிடை கொச்சைநகரே.
|
11 |
ஒழுகலரி தழிகலியில் உழியுலகு
பழிபெருகு வழியைநினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி
குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை
கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகள் மொழிதகையவே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.75 திருச்சண்பைநகர் (சீர்காழி) - திருவிராகம் பண் - சாதாரி |
எந்தமது சிந்தைபிரி யாதபெரு
மானெனஇ றைஞ்சியிமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு
தீபமலி வாய்மையதனால்
அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள்
செய்யஅமர் கின்றஅழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு
மேவுபதி சண்பைநகரே.
|
1 |
அங்கம்விரி துத்தியர வாமைவிர
வாரமமர் மார்பிலழகன்
பங்கயமு கத்தரிவை யோடுபிரி
யாதுபயில் கின்றபதிதான்
பொங்குபர வைத்திரைகொ ணர்ந்துபவ
ளத்திரள்பொ லிந்தவயலே
சங்குபுரி யிப்பிதர ளத்திரள்பி
றங்கொளிகொள் சண்பைநகரே.
|
2 |
போழுமதி தாழுநதி பொங்கரவு
தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள
மாதினொ டிருந்தபதிதான்
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை
துன்னுபொழில் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென
உந்துதகு சண்பைநகரே.
|
3 |
கொட்டமுழ விட்டவடி வட்டணைகள்
கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி
பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்டமது
வாய்மைவழு வாதமொழியார்
சட்டகலை எட்டுமரு வெட்டும்வளர்
தத்தைபயில் சண்பைநகரே.
|
4 |
பணங்கெழுவு பாடலினொ டாடல்பிரி
யாதபர மேட்டிபகவன்
அணங்கெழுவு பாகமுடை ஆகமுடை
யன்பர்பெரு மானதிடமாம்
இணங்கெழுவி யாடுகொடி மாடமதில்
நீடுவிரை யார்புறவெலாந்
தணங்கெழுவி யேடலர்கொள் தாமரையில்
அன்னம்வளர் சண்பைநகரே.
|
5 |
பாலனுயிர் மேலணவு காலனுயிர்
பாறவுதை செய்தபரமன்
ஆலமயில் போலியலி ஆயிழைத
னோடுமமர் வெய்துமிடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர்
கெண்டிநற வுண்டிசைசெயச்
சாலிவயல் கோலமலி சேலுகள
நீலம்வளர் சண்பைநகரே.
|
6 |
விண்பொய்அத னால்மழைவி ழாதொழியி
னும்விளைவு தான்மிகவுடை
மண்பொய்அத னால்வளமி லாதொழியி
னுந்தமது வண்மைவழுவார்
உண்பகர வாருலகி னூழிபல
தோறும்நிலை யானபதிதான்
சண்பைநகர் ஈசனடி தாழுமடி
யார்தமது தன்மையதுவே.
|
7 |
வரைக்குல மகட்கொரு மறுக்கம்வரு
வித்தமதி யில்வலியுடை
யரக்கனது ரக்கரசி ரத்துறவ
டர்த்தருள் புரிந்தஅழகன்
இருக்கயைத ருக்கன்முத லானஇமை
யோர்குழுமி யேழ்விழவினிற்
தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள்
கொண்டலன சண்பைநகரே.
|
8 |
நீலவரை போலநிகழ் கேழலுரு
நீள்பறவை நேருருவமாம்
மாலுமல ரானும்அறி யாமைவளர்
தீயுருவ மானவரதன்
சேலும்இன வேலும்அன கண்ணியொடு
நண்ணுபதி சூழ்புறவெலாஞ்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு
கிள்ளைபயில் சண்பைநகரே.
|
9 |
போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு
வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை
நன்றதுணர் வீருரைமினோ
ஆதியெமை ஆளுடைய அரிவையொடு
பிரிவிலி அமர்ந்தபதிதான்
சாதிமணி தெண்டிரைகொ ணர்ந்துவயல்
புகஎறிகொள் சண்பைநகரே.
|
10 |
வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு
சங்கரன்ம கிழ்ந்தமருமூர்
சாரின்முரல் தெண்கடல்வி சும்புறமு
ழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ்
ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர்
சேர்வர்சிவ லோகநெறியே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.81 திருத்தோணிபுரம் (சீர்காழி) - திருவிராகம் பண் - சாதாரி |
சங்கமரு முன்கைமட மாதையொரு பாலுடன் விரும்பி
அங்கமுடல் மேலுறவ ணிந்துபிணி தீரஅருள் செய்யும்
எங்கள்பெரு மானிடமெ னத்தகுமு னைக்கடலின் முத்தந்
துங்கமணி இப்பிகள் கரைக்குவரு தோணிபுர மாமே.
|
1 |
சல்லரிய யாழ்முழவம் மொந்தைகுழல் தாளமதி யம்பக்
கல்லரிய மாமலையர் பாலையொரு பாகநிலை செய்து
அல்லெரிகை யேந்திநட மாடுசடை அண்ணலிட மென்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே.
|
2 |
வண்டரவு கொன்றைவளர் புன்சடையின் மேல்மதியம் வைத்துப்
பண்டரவு தன்னரையி லார்த்தபர மேட்டிபழி தீரக்
கண்டரவ வொண்கடலில் நஞ்சமமு துண்டகட வுள்ளூர்
தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு தோணிபுர மாமே.
|
3 |
கொல்லைவிடை யேறுடைய கோவணவன் நாவணவு மாலை
ஒல்லையுடை யான்அடைய லார்அரணம் ஒள்ளழல் விளைத்த
வில்லையுடை யான்மிக விரும்புபதி மேவிவளர் தொண்டர்
சொல்லையடை வாகஇடர் தீர்த்தருள்செய் தோணிபுர மாமே.
|
4 |
தேயுமதி யஞ்சடை யிலங்கிட விலங்கல்மலி கானிற்
காயுமடு திண்கரியின் ஈருரிவை போர்த்தவன் நினைப்பார்
தாயெனநி றைந்ததொரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு
தூயமறை யாளர்முறை யோதிநிறை தோணிபுர மாமே.
|
5 |
பற்றலர்தம் முப்புரம் எரித்தடி பணிந்தவர்கள் மேலைக்
குற்றம தொழித்தருளு கொள்கையினன் வெள்ளின்முது கானிற்
பற்றவன் இசைக்கிளவி பாரிடம தேத்தநட மாடுந்
துற்றசடை அத்தனுறை கின்றபதி தோணிபுர மாமே.
|
6 |
பண்ணமரு நான்மறையர் நூன்முறை பயின்றதிரு மார்பிற்
பெண்ணமரு மேனியினர் தம்பெருமை பேசும்அடி யார்மெய்த்
திண்ணமரும் வல்வினைகள் தீரஅருள் செய்தலுடை யானூர்
துண்ணென விரும்புசரி யைத்தொழிலர் தோணிபுர மாமே.
|
7 |
தென்றிசை யிலங்கையரை யன்திசைகள் வீரம்விளை வித்து
வென்றிசை புயங்களை யடர்த்தருளும் வித்தக னிடஞ்சீர்
ஒன்றிசை யியற்கிளவி பாடமயி லாடவளர் சோலை
துன்றுசெய வண்டுமலி தும்பிமுரல் தோணிபுர மாமே.
|
8 |
நாற்றமிகு மாமலரின் மேலயனும் நாரணனும் நாடி
ஆற்றலத னால்மிக வளப்பரிய வண்ணம்எரி யாகி
ஊற்றமிகு கீழுலகும் மேலுலகும் ஓங்கியெழு தன்மைத்
தோற்றமிக நாளுமரி யானுறைவுதோணிபுர மாமே.
|
9 |
மூடுதுவ ராடையினர் வேடநிலை காட்டும்அமண் ஆதர்
கேடுபல சொல்லிடுவ ரம்மொழி கெடுத்தடை வினானக்
காடுபதி யாகநட மாடிமட மாதொடிரு காதிற்
தோடுகுழை பெய்தவர் தமக்குறைவுதோணிபுர மாமே.
|
10 |
துஞ்சிருளின் நின்றுநட மாடிமிகு தோணிபுர மேய
மஞ்சனை வணங்குதிரு ஞானசம் பந்தன்சொன் மாலை
தஞ்சமென நின்றிசை மொழிந்தஅடி யார்கள்தடு மாற்றம்
வஞ்சமிலர் நெஞ்சிருளும் நீங்கியருள் பெற்றுவளர் வாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.84 திருப்புறவம் (சீர்காழி) - திருவிராகம் பண் - சாதாரி |
பெண்ணிய லுரவினர் பெருகிய புனல்விர வியபிறைக்
கண்ணியர் கடுநடை விடையினர் கழல்தொழும் அடியவர்
நண்ணிய பிணிகெட அருள்புரி பவர்நணு குயர்பதி
புண்ணிய மறையவர் நிறைபுகழ் ஒலிமலி புறவமே.
|
1 |
கொக்குடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்குடை வடமுமொர் அரவமு மலரரை மிசையினிற்
திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை மகளொடும்
புக்குட னுறைவது புகதுமலர் விரைகமழ் புறவமே.
|
2 |
கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை உமையொரு
பங்கியல் திருவுரு வுடையவர் பரசுவொ டிரலைமெய்
தங்கிய கரதல முடையவர் விடையவா உறைபதி
பொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர் புறவமே.
|
3 |
மாதவ முடைமறை யவனுயிர் கொளவரும் மறலியை
மேதகு திருவடி யிறையுற வுயிரது விலகினார்
சாதக வுருவியல் கானிடை உமைவெரு வுறவரு
போதக உரியதள் மருவினர் உறைபதி புறவமே.
|
4 |
காமனை யழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில்
தூமம துறவிறல் சுடர்கொளு வியஇறை தொகுபதி
ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ டொளிகெழு
பூமகன் அலரொடு புனல்கொடு வழிபடு புறவமே.
|
5 |
சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர் நடுவிணர் பெருமையர் திருவடி பேணிட
முன்னைய முதல்வினை யறஅரு ளினருறை முதுபதி
புன்ணையின் முகைநெதி பொதியவிழ் பொழிலணி புறவமே.
|
6 |
வரிதரு புலியத ளுடையினர் மழுவெறி படையினர்
பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர்
எரிதரு முரவினர் இமையவர் தொழுவதோ ரியல்பினர்
புரிதரு குழலுமை யொடுமினி துபைதி புறவமே.
|
7 |
வசிதரு முருவொடு மலர்தலை யுலகினை வலிசெயும்
நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது நெரிவுற
ஒசிதர வொருவிரல் நிறுவினர் ஒளிவளர் வெளிபொடி
பொசிதரு திருவுரு வுடையவர் உறைபதி புறவமே.
|
8 |
தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில்
ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை யொருவனும்
வானகம் வரையக மறிகடல் நிலனெனு மெழுவகைப்
போனக மருவின னறிவரி யவர்பதி புறவமே.
|
9 |
கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர்
பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர்
நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த முறைபதி
பூசுரர் மறைபயில் நிறைபுக ழொலிமலி புறவமே.
|
10 |
போதியல் பொழிலணி புறவநன் னகருறை புனிதனை
வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன்
ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள வுரைசெயும்
நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு பிறவியே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.89 திருக்கொச்சைவயம் (சீர்காழி) பண் - சாதாரி |
திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக்
குருந்துமை குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே.
|
1 |
ஏலமார் இலவமோ டினமலர்த் தொகுதியா யெங்கும்நுந்திக்
கோலமா மிளகொடு கொழுங்கனி கொன்றையுங் கொண்டுகோட்டா
றாலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சிமேவும்
நீலமார் கண்டனை நினைமட நெஞ்சமே அஞ்சல்நீயே.
|
2 |
பொன்னுமா மணிகொழித் தெறிபுனற் கரைகள்வாய் நுரைகளுந்திக்
கன்னிமார் முலைநலம் கவரவந் தேறுகோட் டாறுசூழ
மன்னினார் மாதொடும் மருவிடங் கொச்சையே மருவில்நாளும்
முன்னைநோய் தொடருமா றில்லைகாண் நெஞ்சமே அஞ்சல்நீயே.
|
3 |
கந்தமார் கேதகைச் சந்தனக் காடுசூழ் கதலிமாடே
வந்துமா வள்ளையின் பவரளிக் குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள்கோட் டாறுசூழ் கொச்சைமேய
எந்தையார் அடிநினைந் துய்யலாம் நெஞ்சமே அஞ்சல்நீயே.
|
4 |
மறைகொளுந் திறலினார் ஆகுதிப் புகைகள்வான் அண்டமிண்டிச்
சிறைகொளும் புனலணி செழுமதி திகழ்மதிற் கொச்சைதன்பால்
உறைவிட மெனமன மதுகொளும் பிரமனார் சிரமறுத்த
இறைவன தடியிணை இறைஞ்சிவாழ் நெஞ்சமே அஞ்சல்நீயே.
|
5 |
சுற்றமும் மக்களுந் தொக்கவத் தக்கனைச் சாடியன்றே
உற்றமால் வரையுமை நங்கையைப் பங்கமா உள்கினானோர்
குற்றமில் லடியவர் குபமிய வீதிசூழ் கொச்சைமேவி
நற்றவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும்நெஞ்சே.
|
6 |
கொண்டலார் வந்திடக் கோலவார் பொழில்களிற் கூடிமந்தி
கண்டவார் கழைபிடித் தேறிமாமுகில்தனைக் கதுவுகொச்சை
அண்டவா னவர்களும் அமரரும் முனிவரும் பணியஆலம்
உண்டமா கண்டனார் தம்மையே உள்குநீ அஞ்சல்நெஞ்சே.
|
7 |
அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா மலையெடுத் தார்த்தவாய்கள்
உடல்கெடத் திருவிரல் ஊன்றினார் உறைவிடம் ஒளிகொள்வெள்ளி
மடலிடைப் பவளமும் முத்தமுந் தொத்துவண் புன்னைமாடே
பெடையொடுங் குருகினம் பெருகுதண் கொச்சையே பேணுநெஞ்சே.
|
8 |
அரவினிற் றுயில்தரும் அரியும்நற் பிரமனும் அன்றயர்ந்து
குரைகழற் றிருமுடி யளவிட அரியவர் கொங்குசெம்பொன்
விரிபொழி லிடைமிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரியநன் மிடறுடைக் கடவுளார் கொச்சையே கருதுநெஞ்சே.
|
9 |
கடுமலி யுடலுடை அமணருங் கஞ்சியுண் சாக்கியரும்
இடுமற வுரைதனை இகழ்பவர் கருதுநம் ஈசர்வானோர்
நடுவுறை நம்பனை நான்மறை யவர்பணிந் தேத்தஞாலம்
உடையவன் கொச்சையே உள்கிவாழ் நெஞ்சமே அஞ்சல்நீயே.
|
10 |
காய்ந்துதங் காலினாற் காலனைச் செற்றவர் கடிகொள்கொச்சை
ஆய்ந்துகொண் டிடமென இருந்தநல் லடிகளை ஆதரித்தே
ஏய்ந்ததொல் புகழ்மிகு மெழில்மறை ஞானசம் பந்தன்சொன்ன
வாய்ந்தஇம் மாலைகள் வல்லவர் நல்லர்வா னுலகின்மேலே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.94 திருவெங்குரு (சீர்காழி) - திருமுக்கால் பண் - சாதாரி |
விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல் லாரிட ரிலரே.
|
1 |
வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆதிய அருமறை யீரே
ஆதிய அருமறை யீருமை யலர்கொடு
ஓதிய ருணர்வுடை யோரே.
|
2 |
விளங்குதண் பொழிலணி வெங்குரு மேவிய
இளம்பிறை யணிசடை யீரே
இளம்பிறை யணிசடை யீரும திணையடி
உளங்கொள உறுபிணி யிலரே.
|
3 |
விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய
வண்டமர் வளர்சடை யீரே
வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்
தொண்டர்கள் துயர்பிணி யிலரே.
|
4 |
மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினொ டரவசைத் தீரே
அக்கினொ டரவசைத் தீரும தடியிணை
தக்கவர் உறுவது தவமே.
|
5 |
வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
அந்தமில் பெருமையி னீரே
அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே.
|
6 |
விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அழல்மல்கும் அங்கையி னீரே
அழல்மல்கும் அங்கையி னீருமை யலர்கொடு
தொழஅல்லல் கெடுவது துணிவே.
|
7 |
வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்தநன் மலர்புனை வீரே
மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்
சித்தம துடையவர் திருவே.
|
8 |
மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆலநன் மணிமிடற் றீலே
ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ்
சீலம துடையவர் திருவே.
|
9 |
விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அரைமல்கு புலியத ளீரே
அரைமல்கு புலியத ளீரும தடியிணை
உரைமல்கு புகழவர் உயர்வே.
|
10 |
இப்பதிகத்தில் பதினொன்றாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.100 திருத்தோணிபுரம் (சீர்காழி) பண் - சாதாரி |
கரும்பமர் வில்லியைக் காய்ந்துகாதற் காரிகை மாட்டருளி
அரும்பமர் கொங்கையோர் பால்மகிழ்ந்த அற்புதஞ் செப்பரிதாற்
பெரும்பக லேவந்தென் பெண்மைகொண்டு பேர்ந்தவர் சேர்ந்தஇடஞ்
சுரும்பமர் சோலைகள் சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே.
|
1 |
கொங்கியல் பூங்குழற் கொவ்வைச்செவ்வாய்க் கோமள மாதுமையாள்
பங்கிய லுந்திரு மேனியெங்கும் பால்வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோரவந்தென் சாயல்கொண் டார்தமதூர்
துங்கியன் மாளிகை சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே.
|
2 |
மத்தக் களிற்றுரி போர்க்கக்கண்டு மாதுமை பேதுறலுஞ்
சித்தந் தெளியநின் றாடியேறூர் தீவண்ணர் சில்பலிக்கென்
றொத்தபடி வந்தென் னுள்ளங்கொண்ட ஒருவர்க் கிடம்போலுந்
துத்தநல் லின்னிசை வண்டுபாடுந் தோணி புரந்தானே.
|
3 |
இப்பதிகத்தில் நான்காம் செய்யுள் மறைந்து போயிற்று.
|
4 |
இப்பதிகத்தில் ஐந்தாம் செய்யுள் மறைந்து போயிற்று.
|
5 |
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் மறைந்து போயிற்று.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் மறைந்து போயிற்று.
|
7 |
வள்ள லிருந்த மலையதனை வலஞ்செய்தல் வாய்மையென
உள்ளங் கொள்ளாது கொதித்தெழுந்தன் றெடுத்தோன் உரம்நெரிய
மெள்ள விரல்வைத்தென் உள்ளங்கொண்டார் மேவு மிடம்போலுந்
துள்ளொலி வெள்ளத்தின் மேல்மிதந்த தோணி புரந்தானே.
|
8 |
வெல்பற வைக்கொடி மாலும்மற்றை விரைமலர் மேலயனும்
பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய தாய்ப்பணிந்துஞ்
செல்வற நீண்டெஞ் சிந்தைகொண்ட செல்வ ரிடம்போலுந்
தொல்பற வைசுமந் தோங்குசெம்மைத் தோணி புரந்தானே.
|
9 |
குண்டிகை பீலிதட் டோடுநின்று கோசரங் கொள்ளியரும்
மண்டைகை யேந்தி மனங்கொள்கஞ்சி யூணரும் வாய்மடிய
இண்டை புனைந்தெரு தேறிவந்தென் எழில்கவர்ந் தாரிடமாந்
தொண்டிசை பாடல றாததொன்மைத் தோணி புரந்தானே.
|
10 |
தூமரு மாளிகை மாடம்நீடு தோணிபுரத் திறையை
மாமறை நான்கினொ டங்கமாறும் வல்லவன் வாய்மையினால்
நாமரு கேள்வி நலந்திகழும் ஞானசம் பந்தன்சொன்ன
பாமரு பாடல்கள் பத்தும்வல்லார் பார்முழு தாள்பவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.110 திருப்பிரமபுரம் (சீர்காழி) - ஈரடி பண் - பழம்பஞ்சுரம் |
வரம தேளொளா உரம தேசெயும்
புரமெ ரித்தவன் பிரம நற்புரத்
தரன்நல் நாமமே பரவு வார்கள்சீர்
விரவு நீள்புவியே.
|
1 |
சேணு லாமதில் வேணு மண்ணுளோர்
காண மன்றலார் வேணு நற்புரத்
தாணு வின்கழல் பேணு கின்றவ
ராணி யொத்தவரே.
|
2 |
அகல மார்தரைப் புகலும் நான்மறைக்
கிகலி யோர்கள்வாழ் புகலி மாநகர்ப்
பகல்செய் வோனெதிர்ச் சகல சேகரன்
அகில நாயகனே.
|
3 |
துங்க மாகரி பங்க மாவடுஞ்
செங்கை யானிகழ் வெங்கு ருத்திகழ்
அங்க ணானடி தங்கை யாற்றொழத்
தங்கு மோவினையே.
|
4 |
காணி யொண்பொருட் கற்ற வர்க்கீகை
யுடைமை யோரவர் காதல் செய்யுநற்
றோணி வண்புரத் தாணி யென்பவர்
தூமதி யினரே.
|
5 |
ஏந்த ராவெதிர் வாய்ந்த நுண்ணிடைப்
பூந்த ணோதியாள் சேர்ந்த பங்கினன்
பூந்த ராய்தொழும் மாந்தர் மேனிமேற்
சேர்ந்தி ராவினையே.
|
6 |
சுரபு ரத்தினைத் துயர்செய் தாருகன்
துஞ்ச வெஞ்சினக் காளி யைத்தருஞ்
சிரபு ரத்துளா னென்ன வல்லவர்
சித்தி பெற்றவரே.
|
7 |
உறவு மாகியற் றவர்க ளுக்குமா
நெதிகொ டுத்துநீள் புவியி லங்குசீர்ப்
புறவ மாநகர்க் கிறைவ னேயெனத்
தெறகி லாவினையே.
|
8 |
பண்பு சேரிலங் கைக்கு நாதன்நன்
முடிகள் பத்தையுங் கெடநெ ரித்தவன்
சண்பை யாதியைத் தொழும வர்களைச்
சாதியா வினையே.
|
9 |
ஆழி யங்கையிற் கொண்ட மாலயன்
அறிவொ ணாததோர் வடிவு கொண்டவன்
காழி மாநகர்க் கடவுள் நாமமே
கற்றல் நற்றவமே.
|
10 |
விச்சை யொன்றிலாச் சமணர் சாக்கியப்
பிச்சர் தங்களைக் கரிச றுத்தவன்
கொச்சை மாநகர்க் கன்பு செய்பவர்
குணங்கள் கூறுமினே.
|
11 |
கழும லத்தினுட் கடவுள் பாதமே
கருது ஞானசம் பந்த னின்றமிழ்
முழுதும் வல்லவர்க் கின்ப மேதரும்
முக்கண் எம்மிறையே.
|
12 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.113 திருக்கழுமலம் (சீர்காழி) - திருஇயமகம் பண் - பழம்பஞ்சுரம் |
உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே
அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும் உன்பணியே
பெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே.
|
1 |
சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனே
அதிரொளி சேர்திகி ரிப்படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்படையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே மருவிட மேற்பது கைச்சிலையே
விதியினி லிட்ட விரும்பரனே வேணு புரத்தை விரும்பரனே.
|
2 |
காதம ரத்திகழ் தோடினனே கானவ னாய்க்கடி தோடினனே
பாதம தாற்கூற் றுதைத்தனனே பார்த்தன் உடலம் புதைத்தனனே
தாதவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினைய தரித்தனனே
போத மமரு முரைப்பொருளே புகலி யமர்ந்த பரம்பொருளே.
|
3 |
மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே மகிழ்ந்தரை சேர்வது மாசுணமே
மெய்த்துடல் பூசுவர் மேன்மதியே வேதம தோதுவர் மேன்மதியே
பொய்த்தலை யோடுறு மத்தமதே புரிசடை வைத்தது மத்தமதே
வித்தக ராகிய வெங்குருவே விரும்பி யமர்ந்தனர் வெங்குரவே.
|
4 |
உடன்பயில் கின்றனன் மாதவனே யுறுபொறி காய்ந்திசை மாதவனே
திடம்பட மாமறை கண்டனனே திரிகுண மேவிய கண்டனனே
படங்கொள் அரவரை செய்தனனே பகடுரி கொண்டரை செய்தனனே
தொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே தோணி புரத்துறை நஞ்சிவனே.
|
5 |
திகழ்கைய தும்புகை தங்கழலே தேவர் தொழுவதுந் தங்கழலே
இகழ்பவர் தாமொரு மானிடமே யிருந்தனு வோடெழில் மானிடமே
மிகவரு நீர்கொளு மஞ்சடையே மின்னிகர் கின்றது மஞ்சடையே
தகவிர தங்கொள்வர் சுந்தரரே தக்கத ராயுறை சுந்தரரே.
|
6 |
ஓர்வரு கண்கள் இணைக்கயலே உமையவர் கண்கள் இணைக்கயலே
ஏர்மரு வுங்கழ னாகமதே யெழில்கொ ளுதாசன னாகமதே
நீர்வரு கொந்தள கங்கையதே நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோகதி யம்பகனே சிரபுர மேயதி யம்பகனே.
|
7 |
ஈண்டு துயிலம ரப்பினனே யிருங்கணி டந்தடி யப்பினனே
தீண்டல ரும்பரி சக்கரமே திகழ்ந்தொளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகைத்தலையே மிகைத்தவ ரோடுந கைத்தலையே
பூண்டனர் சேரலு மாமதியே புறவம் அமர்ந்த வுமாபதியே.
|
8 |
நின்மணி வாயது நீழலையே நேசம தானவர் நீழலையே
உன்னி மனத்தெழு சங்கமதே யொளியத னோடுறு சங்கமதே
கன்னிய ரைக்கவ ருங்களனே கடல்விட முண்ட கருங்களனே
மன்னி வரைப்பதி சண்பையதே வாரி வயன்மலி சண்பையதே.
|
9 |
இலங்கை யரக்கர் தமக்கிறையே யிடந்து கயிலை யெடுக்கிறையே
புலன்கள் கெடவுடன் பாடினனே பொறிகள் கெடவுடன் பாடினனே
இலங்கிய மேனி யிராவணனே யெய்து பெயரும் இராவணனே
கலந்தருள் பெற்றது மாவசியே காழி யரனடி மாவசியே.
|
10 |
கண்ணிகழ் புண்டரி கத்தினனே கலந்திரி புண்டரி கத்தினனே
மண்ணிக ழும்பரி சேனமதே வானக மேய்வகை சேனமதே
நண்ணி யடிமுடி யெய்தலரே நளிர்மலி சோலையில் எய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே பசுமிக வூர்வர் பசுபதியே.
|
11 |
பருமதில் மதுரைமன் அவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே
வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே
கருதலில் இசைமுரல் தருமருளே கழுமலம் அமரிறை தருமருளே
மருவிய தமிழ்விர கனமொழியே வல்லவர் தம்மிடர் திடமொழியே.
|
12 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.117 சீர்காழி - திருமாலைமாற்று பண் - கௌசிகம் |
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழியா மாமாயாநீ மாமாயா.
|
1 |
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரத ராயாதா காயாகாழீ யாகாயா.
|
2 |
தாவாமூவா தாசாகா ழிநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.
|
3 |
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழியாகாயா வாவாநீ.
|
4 |
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழிகாயாமே லாகாயா.
|
5 |
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.
|
6 |
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.
|
7 |
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.
|
8 |
காலேமேலே காணீகா ழிகாலேமே லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.
|
9 |
வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
|
10 |
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.118 திருக்கழுமலம் (சீர்காழி) பண் - புறநீர்மை |
மடல்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியும் மத்தமுஞ் சடைமேற்
படலொலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார் தம்மிடம் பகரில்
விடலொலி பரந்த வெண்டிரை முத்தம் இப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடலொலி யோதம் மோதவந் தலைக்குங் கழுமல நகரென லாமே.
|
1 |
மின்னிய அரவும் வெறிமலர் பலவும் விரும்பிய திங்களுந் தங்கு
சென்னிய துடையான் தேவர்தம் பெருமான் சேயிழை யொடும்உறை விடமாம்
பொன்னியன் மணியும் முரிகரி மருப்புஞ் சந்தமும் உந்துவன் றிரைகள்
கன்னிய ராடக் கடலொலி மலியுங் கழுமல நகரென லாமே.
|
2 |
சீருறு தொண்டர் கொண்டடி போற்றச் செழுமலர் புனலொடுதூபந்
தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார் தங்கிட மெங்கும்
ஊருறு பதிகள் உலகுடன் பொங்கி யொலிபுனல் கொளவுடன் மிதந்த
காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகரென லாமே.
|
3 |
மண்ணினா ரேத்த வானுலார் பரச அந்தரத் தமரர்கள் போற்றப்
பண்ணினா ரெல்லாம் பலபல வேட முடையவர் பயில்விட மெங்கும்
எண்ணினான் மிக்கார் இயல்பினா னிறைந்தார் ஏந்திழை யவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பங் கண்டொளி பரக்குங் கழுமல நகரென லாமே.
|
4 |
சுருதியான் றலையும் நாமகள் மூக்குஞ் சுடரவன் கரமுமுன் னியங்கு
பருதியான் பல்லும் இறுத்தவர்க் கருளும் பரமனார் பயின்றினி திருக்கை
விருதினான் மறையும் அங்கமோ ராறும் வேள்வியும் வேட்டவர் ஞானங்
கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர் கழுமல நகரென லாமே.
|
5 |
புற்றில்வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனிமலர்க் கொன்றை
பற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த படிறனார் பயின்றினி திருக்கை
செற்றுவன் றிரைகள் ஒன்றோடொன் றோடிச் செயிர்த்துவண் சங்கொடு வங்கங்
கற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங் கழுமல நகரென லாமே.
|
6 |
அலைபுனற் கங்கை தங்கிய சடையார் அடல்நெடு மதிலொரு மூன்றுங்
கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட குழகனார் கோயில தென்பர்
மலையின்மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்கு மற்றுமற் றிடையிடை யெங்குங்
கலைகளித் தேறிக் கானலில் வாழுங் கழுமல நகரென லாமே.
|
7 |
ஒருக்கமுன் நினையாத் தக்கன்றன் வேள்வி யுடைதர வுழறிய படையார்
அரக்கனை வரையால் ஆற்றலன் றழித்த அழகனார் அமர்ந்துறை கோயில்
பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப் பலபல அறங்களே பயிற்றிக்
கரக்குமா றரியா வண்மையல் வாழுங் கழுமல நகரென லாமே.
|
8 |
அருவரை பொறுத்த ஆற்றலி னானும் அணிகிளர் தாமரை யானும்
இருவரும் ஏத்த எரியுரு வான இறைவனார் உறைவிடம் வினவில்
ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல் வெள்ளமுன் பரப்பக்
கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங் கழுமல நகரென லாமே.
|
9 |
உரிந்துயர் உருவில் உடைதவிர்ந் தாரும் அத்துகில் போர்த்துழல் வாருந்
தெரிந்து புன்மொழிகள் செப்பின கேளாச் செம்மையார் நன்மையால் உறைவாங்
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை
கருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங் கழுமல நகரென லாமே.
|
10 |
கானலங் கழனி யோதம்வந் துலவுங் கழுமல நகருறை வார்மேல்
ஞானசம் பந்தன் நற்றமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி உள்ளமும் ஒருவழிக் கொண்டு
வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்றிதற் காணையும் நமதே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |